Thursday 3 November 2011

உலக மக்கள்தொகை 700 கோடி!

உலக மக்கள்தொகை 700 கோடியைத் தொட்டுவிட்டது. 700 கோடியைத் தொட்ட பெண் குழந்தை, இந்தியாவில், உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெள புறநகர்ப் பகுதியில் வாழும் ஒரு ஏழைத் தம்பதிக்குப் பிறந்துள்ளது. இக்குழந்தைக்கு நர்கீஸ் என்று பெயர் வைத்துள்ளார்கள். 


 
உலக மக்கள்தொகையில் 20 விழுக்காடு சீன நாட்டுக்கு உரியது. 18 விழுக்காடு இந்தியாவுக்கு! அமெரிக்காவின் பங்கு வெறும் 5 விழுக்காடு மக்கள்தொகைதான். உலக நிலப்பரப்பில் 2.4 விழுக்காடு கொண்டிருக்கும் இந்திய நாட்டில் 100 கோடி மக்கள்தொகையா என்று வியப்பெய்தும் அதே நேரத்தில், 2025-ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகை 150 கோடியை எட்டும் என்கிறது புள்ளிவிவரம். 

இந்தியாவில் முன்பு "நாம் இருவர் நமக்கு இருவர்' என்ற திட்டமும், தற்போது "வீட்டுக்கு ஒரு மரம், வீட்டுக்கு ஒரு குழந்தை' என்ற திட்டமும் நடைமுறையில் இருந்தாலும் குடும்பக் கட்டுப்பாடுத் திட்டம் அத்தனை தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஆகையால்தான், இன்னும் பதிமூன்று ஆண்டுகளில் கூடுதலாக 50 கோடி மக்களை இந்தியா பெறக்கூடும் என்று கணிக்கப்படுகிறது. 

ஆனால், சீனா அப்படியல்ல. ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை என்பது அரசின் விதி. இதற்கு அதிகமாகப் பிள்ளை பெற்றால் அக்குழந்தைக்கு அரசின் சலுகைகள் - பள்ளி முதல் வேலைவாய்ப்பு வரை- கிடைக்காது. ஆகவே, அங்கே யாரும் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வதில்லை. ஆகவே, மக்கள்தொகைப் பெருக்கத்தை சீனா திறமையாகக் கட்டுப்படுத்திவிட்டது 

 அமெரிக்காவின் முன்னேற்றத்துக்கும் வளத்துக்கும் குறைந்த மக்கள்தொகையே காரணம் என்ற கருத்தாக்கம் உலகம் முழுவதும் பரவலாகியது. மேலை நாட்டின் கருத்தென்றால் தலைவணங்கி ஏற்கும் மூன்றாம் உலக நாடுகள், தங்கள் மக்கள்தொகையைக் குறைக்கும் வழிதேடின.


இந்தியாவின் நிலப்பரப்பையும் அதில் வாழும் மனிதர் எண்ணிக்கையும் எண்ணிப்பார்த்து, நமக்கு உணவு கிடைக்காமல் போய்விடும், உறைவிடம் கிடைக்காமல் போய்விடும் என்று கணக்குப்போடுவது சரியான கணிப்பாக இருக்க முடியாது.

இங்கு நதிகளைச் சாயக்கழிவுகளால் மாசுபடுத்தி, குடிநீரைக் கெடுத்து விவசாயத்தைப் பாழடித்து கோடிகோடியாய் அன்னியச் செலாவணி ஈட்டியதால் ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கும், நிர்வாகத்தில் கோலோச்சும் அதிகாரிகளுக்கும் வீண்செலவுக்கும் ஊழலுக்கும் பணம் கிடைக்கிறதே தவிர, அது எந்தவிதத்திலும் கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகப் பயன்பட்டதாகத் தெரியவில்லை.

இந்தியாவின் குடும்பக் கட்டுப்பாடுத் திட்டத்தில் ஒரு மிகப்பெரிய குறை இருக்கிறது. பொறுப்பான, திறமைசாலிகளான குடிமக்களை உருவாக்குவதற்குப் பதிலாக, தேசத்துக்குப் பாரமாக, சமுதாயத்துக்குப் பயனில்லாத குடிமக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத்தான் நமது மக்கள்தொகைக் குறைப்புத் திட்டம் பயன்பட்டிருக்கிறது.

கல்வி என்பது கொள்ளையாக இல்லாமல் சேவையாக இருந்தால், அரசுப் பள்ளிகள் தரமாக இருக்குமேயானால், படித்தவர்களும், வசதி படைத்தவர்களும் ஐந்தாறு குழந்தைகளைப் பெற்று நாட்டுக்கு நல்ல குடிமக்களைத் தர முடியும். முன்பு தந்து கொண்டிருந்தார்கள். இப்போது நடப்பது என்னவென்றால், படித்தவர்களும், வசதி படைத்தவர்களும் ஒன்றிரண்டு குழந்தைகளை மட்டுமே ஈன்றெடுத்து, அவர்களுக்கு நல்ல கல்வியும், நல்ல வாழ்க்கையும் அமைத்துத் தருகிறோம் என்று நன்றாகப் படிக்க வைத்து, முடியுமானால் வெளிநாடுகளுக்கும் அனுப்பி விடுகிறார்கள்.

இன்னொருபுறம், தனக்கும் தனது மனைவிக்குமான அடிப்படைத் தேவைகளுக்குக்கூட வழியில்லாதவர்கள் ஆறும் ஏழும் குழந்தைகளைப் பெற்று, அதில் சிலரை சமூக விரோதிகளாக உலவ விடுகிறார்கள். 

இந்த எண்ணிக்கை அதிகரிப்பதற்கு, கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் உயராமல் இருப்பதும், கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு அரசு உத்தரவாதம் அளிக்காமல் இருப்பதும், வேலைவாய்ப்புக்கான திட்டங்களை முறையாகச் செயல்படுத்தாமல் இருப்பதும்தான் காரணம் என்பதை நாம் எப்போது உணரப் போகிறோம்?

உணவு இயற்கை கொடுக்கும். உங்களுக்குத் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர் என்கிறான் பாரதி.அந்த மாசற்ற அன்பை மட்டும் இந்த 700 கோடியாவது மலருக்கு நாம் அளிக்க முடியும்.  நர்கீஸ் க்கு  நல்வாழ்த்துகள்!

No comments:

Post a Comment