Wednesday 25 April 2012

இப்படியே போனால், சமூகம் என்ன ஆகும்?

தமிழ்நாட்டில் கல்வித்துறை எந்த அளவுக்குச் சீர்கேடு அடைந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ள திருவண்ணாமலையில் ஒரு தனியார் பள்ளியில் எஸ்எஸ்எல்சி தேர்வுக்கூடத்தில் நடத்தப்பட்ட சோதனையும் அதில் கிடைத்துள்ள சான்றுகளுமே போதுமானவை. 

ஒரு தனியார் பள்ளியில், பொதுத் தேர்வில் பலரும் முறைகேடாகத் தேர்வு எழுதி வருவதாக மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ராவுக்கு மின்அஞ்சல் வந்ததையடுத்து, அவர் திடீர் ஆய்வு நடத்தியதில் கிடைத்த சான்றுகள் அதிர்ச்சி தருபவை.  கணிதத் தேர்வு வினாக்களுக்கான விடைகளை அலுவலகத்தில் ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டிருக்கிறார் ஒருவர்.

20 பிரதிகளை ஆட்சியர் கைப்பற்றுகிறார்.  8 தேர்வு அறைகளின் கண்காணிப்பாளர்களிடம் கணித வினாக்களுக்குரிய விடைகளின் துண்டுத்தாள் (பிட்) இருக்கிறது. எப்படி வந்தது? பதில் இல்லை. எந்த மாணவர்களிடமிருந்து பறிமுதல் செய்தீர்கள்? பதில் இல்லை.  8 ஆசிரிய-ஆசிரியைகளின் செல்போன்களிலும் தேர்வு நேரத்தில் ஏராளமான அழைப்புகள் பதிவாகியிருந்தன.  ஓர் ஆசிரியரின் சட்டைப்பையில் மாணவரின் பெயர், தேர்வு எண், ரூ.200 பணம் இருந்துள்ளது. 

 அதிர்ச்சி அளிக்கும் இந்தச் சம்பவத்தில் இந்தத் தனியார் பள்ளிக்குத் துணை போய் இருப்பவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்!  இத்தகைய முறைகேடுகள் முதலில் அரசுப் பள்ளிகளில்தான் மிகச் சிறிய அளவில், யாருக்கும் பாதிப்பில்லை என்ற அளவில் தொடங்கின. கிராமப்புறப் பள்ளிகளில் ஆசிரியர்கள் வகுப்புக்கே வராமலும், (எஸ்எம்எஸ் வருகைப் பதிவு என்பது இன்னொரு மோசடி) பாடம் நடத்தாமலும், பேருந்து நேரத்துக்கு ஏற்ப வகுப்புகளை ஆசிரியர்கள் "கட்' அடித்துவிட்டுப் போவதும் நடந்துகொண்டிருக்கின்றன.

  கற்பித்தல் பணியில் ஆசிரியர்களின் உழைப்பு இல்லாவிட்டால், மாணவர்கள் மட்டும் எப்படி மதிப்பெண் பெற முடியும்? மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டால், எந்தப் பாடத்தில் தேர்ச்சி குறைந்துள்ளதோ அந்த ஆசிரியருக்கு இடமாற்றம் வரும். ஆகவே, ஒரு மதிப்பெண் வினாக்களுக்கான விடைகளை மட்டும் ஆசிரியர்களே சொல்லிக் கொடுத்துவிடுவது வழக்கமாக இருந்தது. 

இந்த விடைகளில்கூட எது சரி என்று தெரியாமல், செல்போன் மூலமாக வேறொரு ஊரில் தேர்வு அறையில் உள்ள ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து, சொல்லும் வழக்கமும் இங்கேதான் தொடங்கியது.  செல்போனில் ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண் வினாக்களுக்கு மட்டுமே விடை கேட்டு வாங்கி, மாணவர்கள் 40 விழுக்காடு பெற்று தேர்ச்சி பெறச் செய்வதால், இவர்கள் சிறந்த மாணவர்களுக்குப் போட்டியே இல்லை என்பதால், இதனை மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள் தங்களுக்குத் தெரிந்திருந்தாலும் அவற்றைக் கண்டும் காணாமல் இருந்தார்கள்

இத்தகைய முறைகேடுகள் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள், அரசியல்வாதிகளின் பினாமிகள் நடத்தும் தனியார் பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே நடக்கத் தொடங்கிவிட்டன.  பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளிலும் இதே முறைகேடுகள்தான். கண்காணிப்பாளருக்கு பிரியாணி மற்றும் கவர் உண்டு. இதில் தனியார் பள்ளிகளில் சிறப்பாகக் கவனித்தால், அரசுப் பள்ளிகளில் அதன் தரத்துக்கேற்ப கவனிக்கிறார்கள்.

 எங்கே நேர்மையும் ஒழுக்கமும் கற்றுத் தரப்பட வேண்டுமோ, அங்கே ஊழலும் முறைகேடுகளும் அரங்கேற்றப்பட்டன.  வேதியியல் செய்முறைத் தேர்வில், பாக்கெட்டைத் திறந்தால் ஆய்வு செய்ய வேண்டிய உப்பின் பெயர் எழுதியிருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். எல்லா மாணவர்களுக்கும் செய்முறைத் தேர்வில் 40-க்கு மேல்தான் இருக்க வேண்டும் என்பதில் கவனமாகச் செயல்படுகிறார்கள். 

தனியார் பள்ளிகளில் 50-க்கு 50 கொடுத்து, எழுத்துத் தேர்வில் இன்னும் கூடுதல் மதிப்பெண் காட்டப் பார்க்கிறார்கள்.  இதிலும்கூட, ""மாணவர்கள் பாவம், இதில் மதிப்பெண் வாங்கியாகிலும், எழுத்துத்தேர்வில் குறையும் மதிப்பெண்ணை ஈடுசெய்துகொள்ளட்டும்'' என்று கல்வி அதிகாரிகளும் இரக்கம் காட்டுகிறார்கள். இதிலெல்லாமா கருணை காட்டுவது? பிறகு கல்வியின் தரத்தைப் பற்றி பேச முடியுமா?  

இப்போது மாணவர்கள் தேர்ச்சி மட்டுமே பள்ளிகளின் குறிக்கோளாக இல்லை. 100 விழுக்காடு பெற்று, தலைசிறந்த பள்ளி என்பதைக் காட்டிக் கொள்வதற்கான முறைகேடாக இது தனியார் பள்ளிகளில் நுழைந்திருக்கிறது. காரணம் என்ன? தங்கள் புகழைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும், கணிதப் பாடத்தில் தமிழக மாணவர்கள் அனைவரும் திணறியபோது எங்கள் பள்ளி மாணவர்கள் 100-க்கு 100 வாங்கிவிட்டார்கள் என்று பெருமை பேச வேண்டும். அதற்காக எந்தவித முறைகேடுக்கும் தனியார் பள்ளிகள் தயாராகிவிட்டன. கல்விக் கட்டணத்தை மிக மிக அதிகமாக உயர்த்தவும் அதை நியாயப்படுத்தவும் இவை அவர்களுக்குத் தேவையாக இருக்கின்றன.  அப்படியானால், உண்மையாகவே படித்து தேர்வு எழுதும் மாணவர்கள் கணிதத் தேர்வில் 100 மதிப்பெண் பெறமுடியாதவர்களாக இருக்க, யார், யாரோ 100 விழுக்காடு மதிப்பெண் பெறுவார்கள்.

 இது எத்தகைய கீழ்த்தரமானது என்பதைக் கல்வி நிறுவனங்களோ அல்லது கல்வித் துறையோ சிந்திக்கவே இல்லை.  இவர்களது வியாபாரப் போட்டியில் இவர்களது பந்தயக் குதிரை வெற்றி பெற எந்த முறைகேட்டிலும் ஈடுபடுவார்கள். இதற்கு கல்வித் துறை அதிகாரிகளின் அலட்சியமும், அரசியல்வாதிகளின் ஆதரவும்தான் காரணம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.  இந்த முறைகேட்டுக்குத் துணைபோயிருக்கும் 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

ஆனாலும், இவர்களுக்காக ஆசிரியர் உலகம் போராடும் என்பதுதான் அதைவிடக் கேவலமான அவலம். ஆசிரியர் தொழிலுக்கே இழுக்குத் தேடித் தந்திருப்பவர்களைத் தங்களது சக ஆசிரியர்கள் என்று சகதாபத்துடன் பார்ப்பவர்கள்தான் அதனினும் இழிந்தவர்கள் என்று யார் அவர்களுக்குப் புத்தி புகட்டுவது?  ஆசிரியர்களும் அவர்களது குடும்பங்களும் சமூகத்தின் அங்கமல்லாமல் போய் விடுவார்களா? இப்படியே போனால், சமூகம் என்ன ஆகும்?

Thursday 19 April 2012

இந்தியாவின் வெற்றிச்சாதனை! அக்னி-5 .


அக்னி-5 சோதனை தெற்காசிய வலயத்தில் சீனாவின்ஆதிக்கத்திற்கு எதிரான ஓர் வல்லரசாக விளங்க இந்தியா எடுக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது. இதன் வீச்சில்பெய்ஜிங், சாங்காய் சீன நகரங்கள் உள்ளன.

அக்னி-5 மூன்று நிலைகளைக் கொண்ட ஏவுகணையாகும். இதனால் 5,000 கிலோமீட்டர்கள் (3,100 மைல்கள்) வீச்சிற்கு 1.5 டன் எடையுள்ள போர் வெடிபொருளை கொண்டுச் செல்லக்கூடியது.



தற்போதைய நீண்ட தொலைவு ஏவக்கூடிய ஏவுகணையான அக்னி-3 3,500 கிமீ (2,100 மைல்கள்) செலுத்தக்கூடியது.

ஐக்கிய அமெரிக்கா, உருசியா, பிரான்சு, சீனா ஆகிய நாடுகளே கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை செயலாக்க வல்லன.

அக்னி-5 ஏவுகணை முழுமையும் திடநிலை எரி பொருளால் இயங்குகிறது; 17 மீ உயரமுள்ள இந்த ஏவுகணையின் முனையில் பல்வேறு வகை வெடிபொருள்கள், அணுகுண்டு, வேதியியல் நச்சு பொருள், உயிரியல் ஆயுதம் அல்லது வேறு சேதம் விளைவிக்கும் பொருள் எடுத்துச் செல்லக்கூடியது.



அக்னி-5 ஏவுகணையை கட்டமைக்க Indian Rupee symbol.svg25 பில்லியன் ($486 மில்லியன்) செலவாகியுள்ளது. இதன் மூலம் போர்ப்பொருள்களைத் தவிர செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்த முடியும்.

இந்தியாவின் வெற்றிச்சாதனை! அக்னி-5 .


அக்னி-5 சோதனை தெற்காசிய வலயத்தில் சீனாவின்ஆதிக்கத்திற்கு எதிரான ஓர் வல்லரசாக விளங்க இந்தியா எடுக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது. இதன் வீச்சில்பெய்ஜிங், சாங்காய் சீன நகரங்கள் உள்ளன.
 
அக்னி-5 மூன்று நிலைகளைக் கொண்ட ஏவுகணையாகும். இதனால் 5,000 கிலோமீட்டர்கள் (3,100 மைல்கள்) வீச்சிற்கு 1.5 டன் எடையுள்ள போர் வெடிபொருளை கொண்டுச் செல்லக்கூடியது.



தற்போதைய நீண்ட தொலைவு ஏவக்கூடிய ஏவுகணையான அக்னி-3 3,500 கிமீ (2,100 மைல்கள்) செலுத்தக்கூடியது.

ஐக்கிய அமெரிக்கா, உருசியா, பிரான்சு, சீனா ஆகிய நாடுகளே கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை செயலாக்க வல்லன.

அக்னி-5 ஏவுகணை முழுமையும் திடநிலை எரி பொருளால் இயங்குகிறது; 17 மீ உயரமுள்ள இந்த ஏவுகணையின் முனையில் பல்வேறு வகை வெடிபொருள்கள், அணுகுண்டு, வேதியியல் நச்சு பொருள், உயிரியல் ஆயுதம் அல்லது வேறு சேதம் விளைவிக்கும் பொருள் எடுத்துச் செல்லக்கூடியது.



அக்னி-5 ஏவுகணையை கட்டமைக்க Indian Rupee symbol.svg25 பில்லியன் ($486 மில்லியன்) செலவாகியுள்ளது. இதன் மூலம் போர்ப்பொருள்களைத் தவிர செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்த முடியும்.

Monday 2 April 2012

கல்வித் துறையில் கருத்துத் திருட்டு

கருத்துத் திருட்டு என்பது தற்போது கல்வித் துறையில், குறிப்பாக ஆய்வு மாணவர்களிடத்தில் அதிகரித்து வருவது பல பல்கலைக்கழகங்களில் மிகப்பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.  இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது இப்போது வழக்கத்தைவிட அதிகமாக இருக்கக் காரணம், எந்த ஓர் அறிவியல் அல்லது ஆய்வுத் தகவல்களையும் இணையதளத்தின் மூலம் எளிதில் தேடியெடுக்க, படியெடுக்க முடிகின்றது என்பதுதான்.

  இணையதளத்திலிருந்து அப்படியே பல பக்கங்களைப் பதிவிறக்கம் செய்து அதை ஆய்வுக் கட்டுரையுடன் இணைத்துவிடும் தந்திரங்களைப் பல ஆய்வு மாணவர்கள் கையாளுகிறார்கள் என்று பல்கலைக்கழகத் துணைவேந்தர்களே மிகவும் வேதனைப்படுவதும், இதை எப்படிக் கண்டுபிடிப்பது என்று திணறுவதும், கருத்தரங்க மேடைகளில் புலம்புவதும் வாடிக்கையாகிவிட்டது. 

 அண்மையில், இத்தகைய கருத்துத் திருட்டு விவகாரத்தில், பிரதமரின் அறிவியல் ஆலோசகர் சி.என்.ஆர். ராவ் ஒப்புதல் அளித்த ஆய்வுக் கட்டுரை சிக்கியது. அந்த ஆய்வுக் கட்டுரையின் சில தகவல்கள் ஏற்கெனவே ஓர் அறிவியல் இதழில் 2010-ம் ஆண்டிலேயே வந்திருப்பதை எடுத்துக்காட்டிய பிறகு, அந்த ஆய்வுக் கட்டுரையை எழுதியவர்கள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்கள்.  

அந்த இருவரில் ஒருவர், ""கருத்தை எடுத்துக்கொண்டதில் தவறில்லை, அதன் எழுத்தை மாற்றாமல் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை அப்படியே பயன்படுத்தியதுதான் தவறு'' என்றும்கூட சொல்லியிருக்கிறார்.  முன்பெல்லாம் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கும்போது, ஆய்வுக்கு உதவியவர்கள், உதவிய நூல்கள் பட்டியலை மாணவர்கள் இணைப்பார்கள். 

இந்தப் பட்டியல் மிகவும் நீளமாகவும் பல பக்கங்களுக்கும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.  இவர்கள் பட்டியலில் குறிப்பிடும் நூல்களைப் புரட்டியாவது பார்த்திருக்கிறார்களா என்பதை பேராசிரியர்கள் நேர்காணலின்போது, அந்த நூல் தொடர்பான கேள்விகளைக் கேட்டு சோதிப்பதுண்டு. ஆனால், காலப்போக்கில் எல்லா நடைமுறைகளும் மாறிவிட்டன. 

ஆய்வுக் கட்டுரையின் மையக் கருத்துத் தொகுப்புரையை மட்டுமே படித்துவிட்டு, ஆய்வுக் கட்டுரைக்கு ஒப்புதல் வழங்கும் பேராசிரியர்கள் பெருகிவிட்டதும், இத்தகைய துணிச்சலான கருத்துத் திருட்டுக்கு வழிவகுத்துவிட்டது எனலாம்.  கருத்துகளை எடுத்துக் கையாளுதல், மேற்கோள் காட்டுதல், அல்லது கருத்துகளை மேலும் விரிவும் ஆழமும் கொண்டதாக விவாதித்தல் எல்லாமும் அறிவுலகம் ஏற்றுக்கொள்ளக் கூடியதே.

 இது இலக்கியத்தில் நடைபெறும்போது இதுபற்றி யாரும் அதிகம் கவலைப்படப்போவதில்லை.  "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற கணியன் பூங்குன்றனார் கருத்தை, கவிஞர் கண்ணதாசன், "மாநிலம் எல்லாமும் நம் இல்லமே, மக்கள் நம் சொந்தமே' என்று பாடல் வரியாக மாற்றினால், அதை யாரும் கருத்துத் திருட்டு என்று சொல்லிவிட முடியாது. "காலங்களில் நான் வசந்தம்' என்ற பகவத் கீதை வரிகளை, "காலங்களில் அவள் வசந்தம்' என்று எழுதுவதும், அதற்கும் மேலாக கருத்துச் செறிவு தந்து கவிதையை உயர்த்துவதும் கவிஞரைப் பார்த்து வியக்க வைக்கத்தான் செய்யும். 

இலக்கியத்தில் இதை ஏற்றுக்கொள்ள முடிந்தாலும், அறிவியல் ஆய்வுகளில் இதை ஏற்றுக்கொள்வது இயலாது.  ஆய்வு முடிவுகளில் பிறர் கருத்தை ஒப்பீடு செய்யலாமே தவிர, அப்படியே எடுத்தாளவோ அதில் திரிபு செய்து பயன்படுத்துவதோ இயலாது; செய்யவும் கூடாது.  இத்தகைய தவறுகளை ஆய்வு மாணவர்கள் செய்வதற்குக் காரணம் கருத்துத் திருட்டு அல்ல, வெறும் விவரணைத் திருட்டு என்றும் சொல்லப்படுகிறது.  

எழுதத் தெரியாததும், எழுதுவதில் ஆர்வமின்மையும்தான் இத்தகைய மாணவர்களைக் கருத்துத் திருட்டில் ஈடுபட வைக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஓர் அறிவியல் கருத்தை எடுத்துச் சொல்லும் மொழிநடை வறட்சியானது, தட்டையான மொழியில் அமைந்த உரைநடை என்பதால் இதை மீண்டும் எழுதுவதற்குப் பதிலாக இதேபோன்று எழுதப்பட்ட, விவரித்துள்ள ஆய்வு ஏடுகளின் மொழியைத் திருடுவதுதான் இவர்கள் நோக்கமாக இருக்கின்றதே தவிர, கருத்துத் திருட்டாக அவர்கள் நினைப்பதில்லை. 

பாடப்புத்தகத்தை அப்படியே வரிக்கு வரி எழுதுவது சரி என்கிற உளவியல் பதிவு, இவ்வாறு அடுத்தவர் ஆய்வு ஏடுகளிலிருந்து கருத்தை அப்படியே எடுத்துக் கொள்வதை ஒரு தவறு என்ற உறுத்தலை அவர்களுக்கு ஏற்படுத்துவதே இல்லை.  பாடப் புத்தகத்தை அப்படியே வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை பதிலாக எழுதும் கல்வி முறை மாறினால்தான், அடுத்தவர் ஆய்வுக் கட்டுரையிலிருந்து சோம்பேறித்தனத்தால் ஆய்வுப் பக்கங்களை அப்படியே எடுத்தாளும் நிலைமை மாறும். பாடப் புத்தகத்தில் இடம்பெறாத கேள்வி மூலம் கணக்குத் திறனை சோதிக்கும் கேள்விகள் கேட்கப்படுவதைப் போல, அறிவியல் பாடங்களையும் மாணவர்கள் தாங்கள் புரிந்து கொண்டதைத் தங்கள் மொழியில் எழுதும் வாய்ப்புகளையும் அதற்கான மதிப்பெண்களையும் அளிக்க வேண்டும்.  இந்தக் கெடுதலிலும் ஒரு நன்மை. 

ஓர் ஆய்வுக் கட்டுரையை ஏற்றுக் கொள்வதற்கு முன்பாக ஒரு முறைக்குப் பல முறை படிக்க வேண்டிய கட்டாயத்துக்குப் பேராசிரியர்கள் ஆளாகியிருக்கிறார்கள்.  பல முனைவர் பட்ட ஆய்வுகள் எந்தவிதப் படிப்போ, உழைப்போ இல்லாமல் செய்யப்படுவதும், அவற்றை நமது பல்கலைக்கழகங்கள் அங்கீகரித்துப் பட்டம் கொடுப்பதும் வாடிக்கையாகிவிட்டது.

 முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரைகளைத் தயாரித்துக் கொடுப்பதற்கென்றே தரகர்கள் வீதிதோறும் வலம் வரும் அவலம் ஏற்பட்டிருக்கிறது. இதைத் தடுக்கவோ தட்டிக் கேட்கவோ யாரும் இல்லை என்கிற நிலைமைக்கு யார் காரணம்? 

 இந்தப் பிரச்னையில் மாணவர்களைக் குறை கூறுவதைவிட, பல்கலைக்கழகங்களின் தரம் குறைந்து வருவதைப் பற்றித்தான் நாம் கவலைப்பட்டாக வேண்டும். நோட்டுப் புத்தகங்களை விநியோகம் செய்வதுபோல முனைவர் பட்டங்களை வாரி வழங்காமல், முறையான வழிகாட்டுதலும், கண்காணிப்பும் உறுதி செய்யப்பட்டு ஆய்வுகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் மட்டுமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.